திருவனந்தபுரம், மே.31-
கேரளாவில் கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 10 மீனவர்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடை மழை பெய்து வருகிறது. மேலும், பல மாவட்டங்களுக்குத் தொடர்ந்து அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கக் கூடியவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.
சில பகுதிகளில் கனமழை மற்றும் சூறைக்காற்றினால், குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. 500க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது.