கோலாலம்பூர், மே.31-
இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், மலேசியாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
இந்திய போலீசாரால் வலை வீசி தேடப்பட்டு வந்த அந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன், இந்திய போலீசாரிடமிருந்து தப்பிக்க மலேசியாவில் பதுங்கியிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த மே 13 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த இந்தியப் பிரஜை பிடிபட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
அன்றைய தினம் அதிகாலை 1.35 மணியளவில், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்பு போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் அந்த இந்தியப் பிரஜை தப்பிக்க இயலாமல் பிடிபட்டதாக டான் ஶ்ரீ ரஸாருடின் தெரிவித்தார்.
இதனிடைய மலேசியாவில் பிடிபட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னனின் பெயர் நவீன் சிக்கார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன. கடந்த மே 28 ஆம் தேதி அவன், இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு, இந்திய போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.