சிரம்பான், மே.31-
இரண்டு அமைச்சர்கள் பதவி துறந்ததைத் தொடர்ந்து அந்த இடங்களை உடனடியாக நிரப்புமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நெருக்குதல் அளிக்க வேண்டாம் என்று ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.
பொருளதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி மற்றும் இயற்கை வள அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரும் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்தப் பொறுப்புகள் நிரப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒற்றுமை அரசாங்கத்தில் சக உறுப்புக் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்கள் பதவி துறந்தது மற்றும் டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், அம்னோவிலிருந்து விலகியது ஆகிய விவகாரங்களில் ஜசெக தலையிடாது என்று சிரம்பான் எம்.பி.யான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
அதே வேளையில் ஜசெக.விற்கு தொடர்பு இல்லாத இவ்விவகாரத்தில் கட்சியைத் தொடர்புபடுத்தி எந்தவோர் அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று கட்சித் தலைவர்களுக்கு போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் நினைவுறுத்தினார்.