ஜேக் கொள்ளைக் கும்பல் முறியடிப்பு, தலைவன் உட்பட ஐவர் கைது

சுங்கை பட்டாணி, ஜூன்.01-

கெடா, சுங்கை பட்டாணி – கோலா மூடா மாவட்டதிலும் அதன் அருகிலுள்ள சில வட்டாரங்களிலும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஜேக் ஆயதமேந்திய கொள்ளைக் கும்பலைப் போலீசார் முறியடித்துள்ளனர்.

ஜேக் கும்பலின் தலைவன் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டது மூலம் இந்த ஆயுதமேந்திய கொள்ளைக் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

கடந்த மே 28 ஆம் தேதி முதல் நேற்று 31 ஆம் தேதி வரை கோலா மூடா மாவட்டத்தில் நடத்தப்பட்ட ” ஒப் பிந்து” ( Op pintu ) எனும் அதிரடி சோதனையில் ஜேக் கும்பலைச் சேர்ந்த 29 வயது முதல் 52 வயதுடைய ஐந்து உள்நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக ஏசிபி ஹன்யான் ரம்லான் குறிப்பிட்டார்.

ஜேக் கும்பல் பிடிபட்டது மூலம், தாங்கள் நிகழ்த்தியக் கொள்ளைகளுக்கு, இக்கும்பல் பயன்படுத்தி வந்த வாகனம்,ஆயுதங்கள் 1,455 ரிங்கிட் மதிப்புள்ள பன்னாட்டு பண நோட்டுகள் , பல விதமான கைப்பைகள் , கைக் கடிகாரங்கள், மடிக் கணினிகள் , கைப்பேசிகள், தலைக்கவசங்கள் மற்றும் போதைப் பொருள்கள் உட்பட பல வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான ஜேக் கும்பலைச் சேர்ந்த ஒவ்வொருக்கும் 20 க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகள் உள்ளன. அவர்கள் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவர்களின் பெயர்ப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர் என்று ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

இந்தக் கும்பல் பிடிபட்டது மூலம் அண்மையில் சுங்கை பட்டாணி மாவட்டத்தில் ஒரு வழக்கறிஞர் அலுவலகம் , ஒரு பாலர் பள்ளி மற்றும் ஓர் உணவகம் ஆகியவற்றில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவங்களுக்கும் பினாங்கு மாநிலத்தில், சுங்கை டூவாவில் ரூமா சாராங் புருங் வாலிட்டில் ஒரு வீட்டில் நிகழ்ந்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக ஏசிபி ஹன்யான் ரம்லான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS