சிங்கப்பூர், ஜூன்.01-
சிங்கப்பூர் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலவழி எல்லைகளின், சோதனைச் சாவடி மையங்களில் மலேசிய வாகனமோட்டிகள் உட்பட சில வாகன ஓட்டிகள் நேரத்தை மிச்சப்படுத்த வரிசையை முந்திச் செல்லக்கூடும். அவ்வாறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இது மலேசிய வாகனமோட்டிகளுக்கும் பொருந்தும் என்று சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
வரிசையை முந்திச் செல்லும் ஓட்டுநர்களைக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் நிறுத்தக்கூடும். யு-டர்ன் (u-turn) செய்து மீண்டும் வரிசையில் சேர்ந்து கொள்ளுமாறு அதிகாரிகள், அந்த ஓட்டுநர்களுக்கு உத்தரவிடக்கூடும்.
சில ஓட்டுநர்கள் தவறு இழைத்தோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம். அவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படலாம். இவ்வாண்டின் ஜுன் மாதம், பள்ளி விடுமுறைக் காலம் தொடங்கி விட்ட நிலையில் நிலவழி எல்லைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணம் சுமுகமாக இருக்க, போக்குவரத்து ஒழுங்குமுறையைப் பின்பற்றுமாறு சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் வாகன ஓட்டிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.