கோலாலம்பூர், ஜூன்.01-
கோலாலம்பூர் மாநகரின் மையப் பகுதியான டத்தாரான் மெர்டேகா சதுக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் கும்பல் ஒன்றைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒரே கும்பலைச் சேர்ந்த சில தனிநபர்கள் சம்பந்தப்பட்ட அந்த கைகலப்புச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்த சில தனிநபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃப்பண்டி சுலைமான் தெரிவித்தார்.
இந்தக் கைகலப்பு தொடர்பாக போலீஸ் புகார் ஒன்று பெறப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை அறிக்கையும் திறக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குற்றவியல் சட்டம் 148 ஆவது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விசாரணையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர் என்று ஏசிபி சுலிஸ்மி விளக்கினார்.