வெட்டுக் கத்தியை ஏந்திய நிலையில் ஆவேசமாக நடந்து கொண்ட பெண் கைது

தாவாவ், ஜூன்.02-

காரில் வந்த பெண்மணி ஒருவர், கையில் வெட்டுக் கத்தியை ஏந்திக் கொண்டு, பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்திய நிலையில், அவரைப் போலீசார் லாவகமாகப் பிடித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, சபா, தாவாவ் நகரில் மாலை 5 மணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. எனினும் அந்தப் பெண்ணின் ஆக்ரோஷமானச் செயல், பலரை பயமுறுத்தியது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 39 வயதுடைய அந்தப் பெண்ணை பேச்சு கொடுத்தவாறு பிடித்தனர் என்று தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜஸ்மீன் ஹுசேன் தெரிவித்தார்.

அந்தப் பெண் பயன்படுத்திய வெட்டுக் கத்தியைப் போலீசார் பறிமுதல் செய்ததுடன், அவரின் காரைச் சோதனையிட்டதில் கோடாரி மற்றும் இதர கூர்மையான ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார், அவரின் உண்மையான நோக்கம் குறித்து தற்போது புலன் விசாரணை செய்து வருவதாக ஏசிபி ஜஸ்மீன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS