கிள்ளான், ஜூன்.02-
தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சிலாங்கூர் மாநிலக் கிளையின், 20 ஆவது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிரதிநிதிகள் மாநாடு, நேற்று ஜுன் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் கிள்ளான் கோல்ட்கோர்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
டத்தோ ஜி. சங்கரன் தமது உரையில், தொழிற்சங்கத்திற்கும் மாபாவிற்கும் ( MAPA) இடையிலான புதிய கூட்டுச் சம்பள ஒப்பந்தத்தில் வெளிகாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்களான மில் தொழிலாளர்கள், டிரைவர்கள் ஆகியோருக்கான பாக்கி சம்பளம் திருப்திகரமாக இல்லை என்றார்.
கடந்த வாரம் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்திருந்த போது, இவ்விவகாரம் தொடர்பில் மகஜர் ஒன்றைத் தாம் வழங்கியதாக டத்தோ சங்கரன் குறிப்பிட்டார்.
வெளிகாட்டுத் தொழிலாளர்கள், மில் தொழிலாளர்கள், டிரைவர்களுக்கு பாக்கிச் சம்பளத்திற்கான இழப்பீடு பெற்றுத் தரப்பட வேண்டும் என்று அந்த மகஜரில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தாக டத்தோ சங்கரன் சுட்டிக் காட்டினார்.
அந்த பாக்கிச் சம்பளம் தொடர்பில் தொழிற்சங்கத்திற்கும் முதலாளிகளுக்கும் இடையே கூட்டுப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் நிர்பந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அப்படி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவில்லை என்றால் இவ்விவகாரம் மீண்டும் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்ற செய்தி அமைச்சரிடம் கூறப்பட்டது.
கோவிட் 19 பெரும் தொற்று காலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே வேலைக்குச் சென்று, தோட்டத் தொழிலின் உற்பத்தி பெருக்கத்திற்கு துணை நின்றுள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பை கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக டத்தோ ஜி. சங்கரன் தமது உரையில் வலியுறுத்தினார்.
அழைக்கப்ட்ட பிரமுகர்கள் மற்றும் பேராளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் சிலாங்கூர் கிளையின் செயலாளர் தாமாசேகரன், அண்மையில் தேசிய தொழிலாளர் நடவடிக்கை மன்றத்தில் ஓர் உறுப்பினராக அமைச்சர் ஸ்டீவன் சிம்மினால் நியமிக்கப்பட்டிருப்பதையும் டத்தோ சங்கரன் அறிவித்தார்.
தாமாசேகரனின் இந்த நியமனத்தையொட்டி அவருக்கு சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழுவினர், கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
தோட்டத் தொழிலில் இருந்து பணி ஓய்வு பெற்ற 4 தொழிற்சங்க உறுப்பினர்களான எம். முருகன், மாணிக்கம், பூங்காவனம் மற்றும் தேன்மொழி ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் மாநில கிளை, கடந்த மூன்று ஆண்டுகளில் கிரேட் ஈஸ்டர்ன் மற்றும் ஏஐஏ காப்புறுத் திட்டங்களில், கூட்டு ஒப்பந்தத்தின் வாயிலாக அங்கத்தினர்களுக்கு 8 லட்சத்து 19 ஆயிரத்து 636 ரிங்கிட் தொகையை, இழப்பீடாகப் பெற்றுத் தந்துள்ளது என்று மாநில செயலாளர் தாமாசேகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் அங்கத்தினர்களின் இரண்டு பிள்ளைகளுக்கு டாக்டர் பிபிஎன் அறவாரியம் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டது.