சேவை செய்தவர்களுக்கு மட்டுமே பட்டமும் பதக்கமும்

கோலாலம்பூர், ஜூன்.02

கூட்டரசு பட்டங்கள் மற்றும் உயரிய விருதுகள், விலைக்கு வாங்கப்படுவதற்கோ அல்லது பரப்புரை செய்வதற்கோ வழங்கப்படுவதில்லை. மாறாக, அரசாங்கத்திற்கும், நாட்டிற்கும் உண்மையிலேயே சேவையாற்றிய தகுதி வாய்ந்தவர்களுக்கே அத்தகைய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெளிவுப்படுத்தினார்.

பட்டங்களும், விருதுகளும் வழங்கப்படுவதில் சில நிபந்தனைகளை அரசாங்கம் கோடிட்டு, பரிந்துரை செய்தாலும், சம்பந்தப்பட்ட நபரின் தகுதி மற்றும் சேவையை மாமன்னர் என்ற முறையில் தாம் மறுமதிப்பீடு செய்வதாக சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

டத்தோ மற்றும் டான்ஸ்ரீ போன்ற உயரிய விருதுகளை வழங்குமாறு தம்மை நிர்பந்திக்க முயற்சித்த பணக்கார நபர்களை மாமன்னர் சாடினார்.

அத்தகைய உயரிய விருதுகள் விற்பனைக்கு இல்லை. அதற்கு பதிலாக, பணக்காரர்கள் தங்கள் பணத்தை ஏழைகளுக்கு உதவ பயன்படுத்த வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

எனினும் தம்மைப் பொறுத்தவரை நீண்ட காலமாக அரசாங்கத்திற்கும், நாட்டிற்கும் சேவையாற்றி பெரும் பங்களிப்பை வழங்கி பெருமை சேர்ந்த தனிநபர்களுக்கு மட்டுமே இத்தகைய உயரிய விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

இன்று தமது பிறந்தநாளையொட்டி இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் சுல்தான் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS