கோலாலம்பூர், ஜூன்.03
சிவில் வழக்கிலிருந்து தமக்கு விலக்களிக்கப்படுவது உட்பட எட்டு சட்டக் கேள்விகளை முன்நிறுத்தி கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விண்ணப்பம் மீதான வழக்கில், பார்வையாளர்களாகச் செயல்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதி கேட்டு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரும், லாருட் எம்.பி.யுமான டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின், கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் மற்றும் பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ரொனால்ட் கியான்டி ஆகியோரே இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ள 3 எம்.பி.க்கள் ஆவர்.
4 ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமரும், தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வாரினால் தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அவரின் முன்னாள் ஆய்வியல் உதவியாளர் 32 வயது முகமட் யூசோப் ரவுத்தர் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான சிவில் வழக்கு தொடர்பில் அந்த மூன்று எம்.பி.க்களும் இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.
சிவில் வழக்குகளில் இருந்து பிரதமருக்கு விலக்களிப்பது தொடர்பான சட்டவிதிகள் குறித்து கூட்டரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முடிவு தெரியும் வரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த சிவில் வழக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று அன்வார் செய்து கொண்டுள்ள விண்ணப்பம் தொடர்பில் மூவரும் இந்த விண்ணப்பத்தைச் செய்துள்ளனர்.