கோலாலம்பூர், ஜூன்.03-
சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவை ஏமாற்றும் நோக்கில் பொய்யான காப்பீட்டு கோரிக்கைகளில் நடந்த மோசடி மற்றும் நிதி ஏய்ப்பு விவகாரங்களில் அந்த நிறுவனம் கிட்டத்தட்ட 49 மில்லியன் ரிங்கிட் நிதியை வெற்றிகரமாக மீட்டுள்ளது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த நிதி மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்காலிக முடத்தன்மை சலுகை, நிரந்தர முடத்தன்மை சலுகை மற்றும் சுகாதாரப் பரிசோதனை திட்டம் உள்ளிட்ட மோசடி கூறுகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 679 சம்பவங்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டன.
383 சம்பவங்கள் அல்லது மொத்த விசாரணையில் 56.5 விழுக்காட்டு வழக்குகள் மீதான விசாரணைகள் இடையில் நிறுத்தப்பட்டு, அவை மோசடி என உறுதிச் செய்யப்பட்ட நிலையில் இத்தொகை வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
அமெரிக்கா சுயேட்சை மருத்துவ பரிசோதனை வாரியத்துடன் இணைந்து சொக்சோ ஏற்பாடு செய்த சமூகப் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு உரிமைக் கோரல்களில் மோசடி, ஏய்ப்பு மீதான கருத்தரங்கை இன்று கோலாலம்பூரில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் ஸ்டீவன் சிம் மேற்கண்டவாறு கூறினார்.