பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏற்பாட்டில் கல்வியியல் விழா

ஜார்ஜ்டவுன், ஜூன்.04-

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் சிறப்புக் கல்வியியல் விழா, கடந்த மே 31 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்எஸ்என் ராயர் தலைமையில் நடைபெற்ற இக்கல்வியியல் விழாவிற்கு பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் சிறப்பு வருகை புரிந்தார்.

கல்வியே பினாங்கின் எதிர்கால வளர்ச்சிக்கான திறவுக்கோல் என முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தமது உரையில் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு SPM தேர்வில் சாதனை படைத்த இந்து மாணவர்களைக் கெளரவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த கல்வியியல் விழாவில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் ஆர்எஸ்என் ராயருடன், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் R. அருணாசலம், ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் கூறுகையில், 2024 ஆம் ஆண்டு SPM தேர்வில், பினாங்கு மாநிலத்தில் 167 இந்து மாணவர்கள் 7A க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனைப் படைத்துள்ளதாகப் புகழாரம் சூட்டினார்.
ஒவ்வொரு A க்கும் 50 ரிங்கிட் வெகுமதி என சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் மொத்தம் 70 ஆயிரத்து 200 ரிங்கிட் வழங்கப்பட்டதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

தவிர மாணவர்களின் அபரிமிதச் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பினாங்கு முதல்வர் சோவ் கோன் யோவ் கையெழுத்திட்ட நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பினாங்கு மாநிலத்தில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற டர்ஷினி சுபாஷ் சன், சிறந்த மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டு, வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டதுடன் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக, அதிநவீன மடிக்கணினியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS