முன்னாள் மந்திரி பெசார் வீட்டில் திருடிய குற்றத்திற்காக ஆடவருக்கு 30 மாதச் சிறை

அலோர் ஸ்டார், ஜூன்.04-

கெடா மாநில முன்னாள் மந்திரி பெசார் அஹ்மாட் பாஷா முகமட் ஹனிபா வீட்டில் நுழைந்து திருடிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 30 மாத சிறைத் தண்டனை விதித்தது.

44 வயது டி. ராகேஷ் குமார் என்ற அந்த ஆடவர் மாஜிஸ்திரேட் நூர் ஷிஃபா முகமட் ஹம்ஸா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. தனக்கு எதிரான குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

30 மாத சிறைத்தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் நூர் ஷிஃபா, அந்த நபருக்கு 1,500 ரிங்கிட் அபராதமும் விதித்தார்.

பசார் மாலாம் வியாபாரியான ராகேஷ் குமார், கடந்த மே 29ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் அலோர் ஸ்டார், தாமான் ரக்யாட்டில் உள்ள முன்னாள் மந்திரி பெசார் அஹ்மாட் பாஷாவின் வீட்டிலிருந்து புற்கள் வெட்டும் இயந்திரத்தைக் களவாடிச் சென்றதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS