கோலாலம்பூர், ஜூன்.04-
தனக்கு எதிராக யூசோஃப் ரவுத்தர் தொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பான சிவில் வழக்கு விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்து கொண்ட விண்ணப்பத்தைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தனக்கு எதிராக அன்வார் பாலியல் வன்கொடுமை புரிந்ததாகக் கூறி, அவருக்கு எதிராக யூசோஃப் ரவுத்தர் இந்த சிவில் வழக்கைத் தொடுத்துள்ளார்.
பிரதமர் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு, சிவில் வழக்குகளில் இருந்து, சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுகிறதா? இது போன்ற வழக்குகளிலிருந்து தனிப்பட்ட விலக்கு அளிக்கப்படுகிறதா? என்பது தொடர்பான 8 சட்டப்பூர்வ கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் விடை காணும் வரையில், தனக்கு எதிராக யூசோஃப் ரவுத்தர் தொடுத்துள்ள இந்த சிவில் வழக்கு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று தனது விண்ணப்பத்தில் அன்வார் கேட்டுக்கொண்டு இருந்தார்.
எனினும் அன்வார், கூட்டரசு நீதிமன்றத்தில் முன்வைக்கவிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்புடைய 8 கேள்விகளுக்கு தேவையான தகுதிப்பாட்டை, அவர் பூர்த்தி செய்யவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
அன்வாரின் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது மூலம் யூசோஃப் ரவுத்தர் தொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்த சிவில் வழக்கு விசாரணை, திட்டமிட்டப்படி வரும் ஜுன் 16 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் உத்தரவிட்டார்.
அத்துடன் வழக்குச் செலவுத் தொகையாக யூசோஃப் ரவுத்தருக்கு 20 ஆயிரம் ரிங்கிட்டை வழங்குமாறு அன்வாருக்கு அவர் ஆணைப் பிறப்பித்தார்.