வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

பெங்களூரு, ஜூன்.04-

பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 18 ஆண்டு கால பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் முறையாக பெங்களூரு மகுடத்தைச் சூடியது. இதனை பெங்களூரு அணி ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோப்பையை வென்ற பெங்களூரு அணியினர் சொந்த ஊருக்குத் திரும்பினர். அவர்களை கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.

தொடர்ந்து, கோப்பையை ஏந்தியபடி விராட் கோலி பேருந்தில் அமர்ந்த நிலையில், பெங்களூரு வீரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். சின்னசாமி மைதானத்தில் வீரர்களைக் கௌரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் திரண்டனர்.

இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பலர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS