பெந்தோங், ஜூன்.05-
ஆடம்பரக் கார்களை ஏற்றி வந்த டிரெய்லர் லோரியில் திடீரென்று தீப் பரவியதில் அந்த லோரி முற்றாகத் தீக்கிரையானது.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 11.40 மணியளவில் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையின் 39 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைக்காம் முகமட் காஹார் தெரிவித்தார்.
போக்குவரத்து நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான அந்த ஸ்கானியா ரக லோரி, டொயோட்டா ஹேரியர் வாகனங்களை ஏற்றி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
லோரியின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீப் பொறி, லோரி முழுவதும் பரவி, அது ஏற்றி வந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த 34 வயது வாகனமோட்டுநர் காயமின்றி உயிர் தப்பியதாக ஸைக்காம் காஹார் தெரிவித்தார்.