MISI (மிஸி) 2.0 நிறைய பேரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்

கோலாலம்பூர், ஜூன்.05-

மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் தூர நோக்குச் சிந்தனையில் உருவான இந்தியர்கள் திறன் மேம்பாட்டு முன்னெடுப்பான MISI- ( மிஸி) – யின் 2.0 திட்டம், இவ்வாண்டு இந்திய இளையோர்களின் பலரது வாழ்க்கைத் தரத்தை மாற்றும், அவர்களின் நிலையை உயர்த்தும் என்று மனித வள அமைச்சின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

MISI- 2.0 என்பது ஒரு நீண்ட காலப் பயிற்சித் திட்டத்தை உள்ளடக்கியதாகும். இந்த பயிற்சித் திட்டம் 6 மாத காலம் வரை உள்ளது.

தற்போது இந்த 2.0 பயிற்சித் திட்டத்தில் பங்கு கொள்வதற்கு 200 க்கும் மேற்பட்டவர்கள், தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளார்கள். இவர்களில் சிலர் 7 மாதம் முதல் ஒரு வருடம் வரைகூட வேலை இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

அதே வேளையில், MISI 2.0 திட்டத்தின் வாயிலாக 2 மாத காலப் பயிற்சி பெற்றவர்கள், ஐபிஎம்மில் வேலை வாய்ப்பைப் பெற்று, இன்று தொடக்கச் சம்பளமே 5 ஆயிரத்து 500 வெள்ளியைப் பெறும் அளவிற்கு தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டுள்ளனர்.

சுருங்கச் சொன்னால், MISI 2.0, இந்திய இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினைக்குப் பெரும் தீர்வாக அமையும் என்று டிக்காம் லூர்ட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

மிஸியின் ஏற்பாட்டில் இன்று கோலாலம்பூர், கொம்ப்ளெக்ஸ் மெட்ரோ புடுவில் உள்ள இம்பெரியம் அனைத்துலகக் கல்லூரியில் மிஸியின் இரண்டு பயிற்சித் திட்டங்கள் அறிமுக நிகழ்வில் உரையாற்றுகையில் டிக்காம் லூர்ட்ஸ் இதனைத் தெரிவித்தார்.

மிஸியின் 1.0 திட்டமானது, கூடியபட்சம் 5 நாளாக இருந்தாலும் இந்த 5 நாள் பயிற்சியின் பங்கேற்பாளர்கள் தங்களின் அடிப்படை திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு பெரும் துணை புரிந்து இருப்பதாக டிக்காம் லூர்ட்ஸ் விவரித்தார்.

முன்னதாக, மிஸி ஏற்பாட்டில் நடைபெற்ற 5 நாள் பயிற்சியான உறைந்த உணவு உற்பத்தி, தொழில் நுட்பங்கள், திறன்கள், தொழில்முனைவோர் என்ற முதல் பயிற்சி திட்டம் மற்றும் தொழில் முனைவோருக்கான உணவுப் பாதுகாப்பு, பேக்கேஜிங் பட்டறை என்ற இரண்டாவது பயிற்சி திட்டம் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற 75 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS