கட்டுமானத் தளத்தில் எட்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து சர்வேயர் மரணம்

புக்கிட் மெர்தாஜாம், ஜூன்.06-

கட்டுமானத் தளத்தில் எட்டாவது மாடியின் லிப்டு குழியிலிருந்து கீழே விழுந்து அளவையாளர் ஒருவர் மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் உள்ள கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்தது. அந்த சர்வேயர், எட்டாவது மாடியியிலிருந்து 27 மீட்டர் உயரத்தில் கீழே விழுந்ததாக நம்பப்படுகிறது.
எட்டாவது மாடியில் மின்தூக்கி பொருத்துவதற்காக அளவிடும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

எட்டாவது மாடியின் லிப்டு குழிக்கு அருகில் யாரும் சென்றடையாமல் இருப்பதற்கு போதுமான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை போதவில்லை என்பது தாங்கள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பினாங்கு மாநில சுகாதார மற்றும் வேலையிட பாதுகாப்பு இலாகாவின் இயக்குநர் ஹைரோஸி அஸ்ரி தெரிவித்தார்.

41 வயது சர்வேயர், கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டார். இந்த விபத்து தொடர்பான விசாரணை முடியும் வரையில் கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS