கோலாலம்பூர், ஜூன்.06-
முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுடினுக்குச் சொந்தமான இல்ஹாம் டவர் கட்டடத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், இரண்டாவது முறையாகப் பறிமுதல் செய்து இருப்பது அறிவுக்குப் பொருந்தாத விவகாரமாகும் என்று துன் டாயிமின் துணைவியார் நயிமா காலிட் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர்கள் ராஜேஸ் நாகராஜனும், சச்பிரிட்ராஜ் சிங் சொஹான்பாலும் வர்ணித்துள்ளனர்.
இது உண்மையிலேயே பழிவாங்கும் செயலாகும். சட்டத்தை மீறிய செயல் என்பதுடன், எஸ்பிஆர்எம், தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி வருகிறது என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் ஸைனுடினுக்கு எதிராகப் பிரதமரும், எஸ்பிஆர்எம் தலைமை ஆணையரும் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வந்தாலும், அவருக்கு எதிராக இதுவரை நீதிமன்றத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த இரு வழக்கறிஞர்களும் தெரிவித்தனர்.
கோலாலம்பூர் மாநகரின் மையப் பகுதியான பெர்சியாரான் கேஎல்சிசி அருகில் ஜாலான் பின்ஜாயில் வீற்றிருக்கும் 60 மாடிகளைக் கொண்ட 7 ஆவது மிக உயரமான கட்டடமான துன் டாயிம் ஸைனுடிக்குச் சொந்தமான அந்தக் கட்டடம், சட்டவிரோதப் பண மாற்றம் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து அவ்விரு வழக்கறிஞர்களும் கருத்துரைத்தனர்.