இடைக்காலத் தடை உத்தரவு கோரும் டத்தோஸ்ரீ அன்வாரின் விண்ணப்பம் செவ்வாய்க்கிழமை அப்பீல் நீதிமன்றத்தில் விசாரணை

கோலாலம்பூர், ஜூன்.06-

தனது முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோப் ரவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கின் விசாரணையை நிறுத்தி வைப்பதற்கு இடைக்காலத் தடை உத்தரவு கோரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழக்கு மனுவை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் வரும் செவ்வாய்க்கிழமை செவிமடுக்கவிருக்கிறது.

அன்வாரின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கே. ராஜசேகரன், இன்று பிற்பகலில் அப்பீல் நீதிமன்ற துணைப் பதிவதிகாரி முன்னிலையில் வழக்கு தொடர்பான சாரம்சத்தை விளக்கியதைத் தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவு கோரும் அன்வாரின் விண்ணப்பத்தை செவிமடுப்பதற்கு வரும் செவ்வாய்க்கிழமை, விசாரணை நாளாக நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

யூசோப் ரவுத்தர் தனக்கு எதிராகத் தொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கைச் செவிமடுப்பதற்கு முன்னதாக கூட்டரசு நீதிமன்றத்தில் தாம் முன்வைக்கவிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான 8 கேள்விகளுக்கு விடைக் காணும் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நிராகரித்ததைத் தொடர்ந்து அன்வார், வழக்கை நிறுத்தி வைக்க இந்த இடைக்கால தடை உத்தரவைக் கோருகிறார்.

யூசோப் ரவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கு மீதான விசாரணை, வரும் ஜுன் 16 ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதற்கு முன்னதாகவே வழக்கை நிறுத்தி வைக்கக் கோரும், இடைக்கால தடை உத்தரவு கேட்டு அன்வார், அப்பீல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS