பேராக், பகான் செராய், களும்பாங் தோட்ட ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத் தீமிதி திருவிழா

பகான் செராய், ஜூன்.07-

நாட்டில் மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான 175 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்பைக் கொண்ட பேராக், பகான் செராய், களும்பாங் தோட்டத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் கடந்த மே 31 ஆம் தேதி சனிக்கிழமை தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

149 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி கடந்த மே 14 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது. இவ்விழாவின் உற்சவ நிகழ்வாக 2025 ஆம் ஆண்டுக்கான தீமிதி திருவிழாவை, இத்தோட்டத்தில் முன்பு வாழ்ந்த குடும்பங்களின் தலைமுறையினரின் ஆதரவுடன் ஆலய நிர்வாகத்தினர் முன்னெடுத்து நடத்தினர்.

மகாபாரதக் கதையைத் தழுவிய பல நிகழ்வுகளை நடைமுறையில் செய்து, அந்த மகாகாவியத்திற்கு உயிரோட்டம் கொடுத்து, பதினெட்டு நாட்களுக்குக் கதையாக வாசித்து, அதில் வரும் கதாபாத்திரங்கள், காட்சிகள் ஒரு நிகழ்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஏற்பாடு செய்து, அந்த கதையில் வரும் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம்தான் இத்திருவிழாவின் உற்சவமாகும்.

தோட்டத்து மக்களுக்கு மகாபாரதத் கதையும், குறிப்பாக திரெளபதியம்மன் வரலாறும், அவருடைய தோற்றமும் நன்கு பரீட்சியமாகும். எப்படி அக்னிலிருந்து அம்பாள் தோன்றி, வந்தாரோ, அதன் நினைவாக அக்னி உச்சவம் என்று அழைக்கப்படும் தீமிதி விழாவை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இவ்வாண்டு தீமிதி திருவிழாவில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு மெருகூட்டினர்.

காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மாலை 5 மணிக்கு தோட்டத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி வந்தும், சுமந்து வந்தும் ஆலயத்திற்கு முன்புறமுள்ள தீக்குழியில் தீமிதித்தும், தீக்குழியைச் சுற்றி வந்தும், தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

பக்தர்கள் தீக்குழி இறங்கும் நிகழ்வை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு பரவசமடைந்தனர். தீக்குழியில் மிதிப்பதும், தீக்குழியைச் சுற்று வருவதும் மூலம் அம்பாளின் அனுக்கிரகம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

ஆலயத்தின் அம்மன் சன்னதியில் காவடி தூக்கியவர்கள், கரகம் சுமந்தவர்கள் நாதஸ்வரம், உறுமிமேளம் இசைக்க மிகவும் பக்தியோடு ஆடியக் காட்சி பக்தர்களை மெய்சிலிக்க வைத்தது.

மகாபாரதக் கதையை நாடக வடிவிலும், ஆலயத்தின் வழிபாட்டின் மூலமாகவும் கொண்டுச் செல்லப்பட்டு, நீதிக் கதையை கேட்டே வாழ்ந்தவர்கள் களும்பாங் தோட்ட மக்களாகும்.

இத்தோட்டத்தில் வாழ்ந்த மக்கள், மகாபாரதத்தைத் தொட்டு, எந்த கேள்வி கேட்டாலும் அனைவரும் பதில் சொல்லும் அளவிற்கு மகாபாரதக் கதையுடன் இரண்டறக் கலந்தவர்கள் ஆவர். அதற்கு சான்று தோட்டத்தில் ஆண்டு தோறும் மகாபாரதக் கதையை தழுவிய பல நிகழ்வுகளுடன், 18 நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்த தீமிதி திருவிழாவாகும் என்றார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரகதீஸ் பால சிங்கம்.

WATCH OUR LATEST NEWS