கோலாலம்பூர், ஜூன்.07-
இந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களை ஒரு பெரிய குடையின் கீழ் பாதுகாப்பதற்கு செயலகத் திட்டத்தை அறிவித்து இருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் செயலானது, மலாய்க்கார்களை முட்டாளாக்கும் தந்திரமாகும் என்று அமானா கட்சியின் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் நஷ்ருடின் நஹாருடின் வர்ணித்துள்ளார்.
மலாய்க்காரர்களைப் பாதுகாக்கப் போவதாகக் கூறி, அவர்களை அதள பாதாளத்தில் தள்ளுவதற்குதான் துன் மகாதீர் வியூகம் வகுக்கிறார் என்று டாக்டர் நஷ்ருடின் தெரிவித்துள்ளார்.
துன் மகாதீரின் பெரிய குடைத் திட்டம், சுதந்தரத்திற்கு முன்பு மலாய்க்காரர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அந்த இருளடைந்த பாதைக்குத் திரும்பக் கொண்டுச் செல்வதற்கே வித்திடும், நடைமுறைக்கு சரிபட்டு வராது என்று அவர் குறிப்பிட்டார்.
மலாய்க்காரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் அரசியல் அணுகுமுறை, அவர்களை முட்டாளாக்கும் முயற்சியாகும். கூட்டு விவேகத்தன்மையில் ஆரோக்கியமான போட்டா போட்டிக்கு வழிவிடாமல் மலாய்க்காரர்களை முடக்கி விடும் என்று டாக்டர் நஷ்ருடின் எச்சரித்தார்.