ஜெராந்துட், ஜூன்.07-
இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பகாங், ஜெராந்துட், ஜாலான் ஃபெரியில் நிகழ்ந்தது.
பெரோடுவா பேஸா காரும், டொயொட்டா அல்ஃபார்ட் வாகனமும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இலாகா இயக்குநர் முகமட் ரஸாம் தாஜா ரஹிம் தெரிவித்தார்.
பெரோடுவா பேஸா காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 க்கும் 26 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் இதில் உயிரிழந்தனர். இருவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த வேளையில், இதர மூவர் வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்று முகமட் ரஸாம் குறிப்பிட்டார்.