ஜார்ஜ்டவுன், ஜூன்.07-
மடானி வீட்டுடைமைத் திட்டத்தின் கீழ் வீடுகளை வாங்குவதற்கு இந்திய முஸ்லிம்களுக்கு விசேஷமான முறையில் 5 விழுக்காடு கழிவு வழங்கும் பினாங்கு மாநில அரசின் முடிவுக்கு பலத்த கண்டனம் எழுந்திருப்பதைத் தொடர்ந்து அந்த முடிவை பினாங்கு மாநில அரசு மறுபரிசீலனை செய்யும் என்று பினாங்கு ஜசெக தலைவர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம்களுக்கு மட்டும் 5 விழுக்காடு கழிவு வழங்கப்படுவது மூலம் பினாங்கு மாநில அரசு இனவாத நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்றும், /பாரபட்சம் காட்டுகிறது என்றும், அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது என்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து அந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சி என்ற முறையில் இனம், மதம் வேறுபாடுயின்றி அனைத்து மலேசியர்களுக்கும் நீதி மற்றும் நலன் சார்ந்த கொள்கைகளை ஜசெக எப்போதும் ஆதரித்து வருகிறது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
இந்த விஷயத்தை நான் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவுடன் விவாதித்தேன். இந்த பிரச்சினையை மாநில அரசின் ஆட்சிக் குழுவில் மறுஆய்வுக்கும், மறு விவாதத்திற்கும் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் ஒப்புக் கொண்டார் என்று மனித வள அமைச்சருமான ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
பினாங்கு மாநில அரசாங்கம் சமூக நீதியின் கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதும், ஒவ்வொரு மலேசியருக்கும் சொந்தமாக வீடு வைத்திருக்கும் உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்வதும் / முக்கியம் என்று ஸ்டீவன் சிம் இன்று வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில் கூறினார்.
பினாங்கில் கட்டப்பட்டுள்ள வீடுகளை வாங்குவதற்கு இந்திய முஸ்லிம்களுக்கு வீட்டு விலையில் 5 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று கடந்த வியாழக்கிழமை பினாங்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு மனித உரிமை வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் கடுமையாகச் சாடியிருந்தார்.
பினாங்கு அரசின் நியாயமற்ற அக்கொள்கை கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சமத்துவக் கோட்பாடுகளுளைக் கீழறுக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கும், சமயத்திற்கும் சாதகமான அமைந்துள்ளது என்று ராஜேஸ் கூறியிருந்தார்.
வீட்டு விலையில் இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமே 5 விழுக்காடு கழிவு என்றால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பெளத்தர்கள், பஹாய் மற்றும் சீக்கியர்களை ஓரங்கட்டுவதா? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.