பேரா மாநிலத்தில் புதிய இந்துக் கோவில்களுக்குத் தடை – ஊடகங்களில் சாடிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள்

ஈப்போ, ஜூன்.08-

பேரா மாநில அரசு, அரசாங்க நிலத்தில் இந்து கோவில்கள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குத் தடை விதிக்கும் முடிவை எடுத்துள்ளது. இது இந்திய சமூகத் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடை, பேரா மாநில நிலம், சுரங்கத் துறை இயக்குநர் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தடை குறித்து ம.இ.கா. தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ மு. சரவணன், சமூக ஊடகங்களில் கடுமையானத் தமிழ் கவிதையைப் பகிர்ந்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த பேரா இந்திய சமூக விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவனேசன், சரவணன் தனது கவிதையைக் குப்பையில் போட வேண்டும் என்று சாடினார். அத்துடன், ம.இ.கா. ஆட்சியில் இருந்தபோது இக்கோவில் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

மகக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன், இந்தத் தடை மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும், இந்திய சமூகத்தின் நம்பிக்கைகளுக்கும் கலாச்சாரத்திற்கும் இழிவு காட்டுவதாகவும் தெரிவித்தார். பல கோவில்கள் காலனித்துவ காலத்தில் இருந்தே அரசாங்க நிலத்தில் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கட்டப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேரா அரசு இந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பழமையான கோவில்களின் நிலையை உறுதிப்படுத்த நீண்டகால செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் தனேந்திரன் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS