பெங்களூரு, ஜூன்.09-
கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி பெங்களூரு கிரிக்கெட் அணி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஐ.பி.எல்., சாம்பியன் பட்டத்தை முதல்முறை பெங்களூரு அணி பெற்றதைக் கொண்டாடும் வகையில் சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தாமாக முன்வந்து கர்நாடகா உயர் நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்துள்ளது. விராட் கோலி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
இந்நிலையில் பெங்களுரு அணி மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி, அணி நிர்வாகம் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் நாங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளோம். குறைந்த எண்ணிக்கையிலான பாஸ்கள் மட்டுமே உள்ளன. இலவச பாஸ் வேண்டும் என்பவர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பொது அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அரங்கின் நுழைவு வாயில் ஏற்கனவே அறிவித்தபடி மதியம் 1.45 மணிக்கு பதிலாக, 3 மணிக்கு தான் திறக்கப்பட்டது. இந்த கால தாமதம்தான் கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையின் குறைபாடே உயிரிழப்புகள் நிகழக் காரணம்.
இவ்வாறு அந்த வழக்கில் பெங்களூரு அணி நிர்வாகம் கூறியுள்ளது. வெகு விரைவில் இந்த வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.