செடனாக், ஜூன்.09-
கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நி சிங், செடனாக் தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 5 ஆயிரம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளார்.
முன்னதாக, கூலாயில் உள்ள செடனாக் தோட்ட, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் கெலான் தோட்ட, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழாவில் தியோ கலந்து சிறப்பித்தார்.
“இவ்விழாவின் சிறப்பையும், உற்சாகத்தையும் கண்டு நான் வியப்படைகிறேன். அதோடு, கூலாய் வாழ் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்ட இவ்விழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த ஆலய பொறுப்பாளர்களுக்கு எனது பாராட்டுகள்.” என்றார் தொடர்புத்துறை துணை அமைச்சரான தியோ நி சிங்.
ஆலயத்திற்கு வழங்கப்பட்ட இந்த நன்கொடை, மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த விழாக்களை ஏற்பாடு செய்ய ஆலயத்திற்கு உதவும் என தியோ நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்தாண்டு கூலாய் நாடாளுமன்ற சேவை மைய அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான விண்ணப்பங்களில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த 17 ஆலயங்கள் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு மொத்தம் 59 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
”கூலாய் நாடாளுமன்றத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு ஆலய நிர்வாகமும் ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பப் பாரத்தை சமர்ப்பிக்க வரவேற்கப்படுகின்றனர். இதில் இன, மதம், அரசியல் பின்னணி பார்க்காமல், அனைவருக்குமான ஒதுக்கீடுகளை நான் தொடர்ந்து வழங்கி வருகிறேன். இம்முயற்சி தொடரும்.” என்றார் அவர்.
கூலாயில் உள்ள அனைத்து சமூகத்தின் நல்வாழ்வுக்காக சிறந்த சேவையை வழங்க தாம் உறுதி பூண்டுள்ளதாகவும் தியோ தமது உரையில் தெரிவித்தார்.