சிரம்பான், ஜூன்.09-
2021 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அமலில் இருந்து வரும் முந்தைய நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டு விநியோக சட்டத்தின் கீழ் திருத்தங்கள் செய்வது தொடர்பான பரிந்துரைக்கு கடந்த ஜுன் 5 ஆம் தேதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பிர் எஸ். வீரப்பன் தெரிவித்துள்ளார்.
முந்தைய சட்டத்தின்படி, 2021 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாடு சட்டத்தில் கீழ் அட்டவணையிடப்பட்ட பொருட்களுக்கான விலை கட்டுப்பாடு அனுமதியானது, ஒரு நேரத்தில் தேவைப்படும் 42 கிலோகிராமிற்கு மேல் திரவ பெட்ரோலிய எரிவாயுவை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும், வணிகர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
எனினும் புதியதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தமானது, குறு மற்றும் சிறிய அளவிலான உணவு மற்றும் பான வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்களின் அத்தியாவசியத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாகும் என்று வீரப்பன் தெரிவித்தார்.
இது அமலாக்க நடவடிக்கைகளை உறுதிச் செய்வதற்கு சட்டத்தின் தெளிவை உருவாக்கியுள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பயனீட்டாளர்களின் விவகார இலாகாவிற்குப் பொறுப்பான ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த திருத்தங்களைத் தாம் முழுமையாக வரவேற்று, ஆதரிப்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த திருத்தங்கள், தீர்க்கமாக உறுதிச் செய்யப்படும் காலம் வரை, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஓப்ஸ் காசாக் மூலம் குறு மற்றும் சிறு வணிகர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.
ஆனால், நிதிக் கசிவை ஏற்படுத்த வழிவகுக்கும் இத்தொழில்துறையின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தனது இலாகாவின் போராட்டம் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்று வீரப்பன் தெரிவித்துள்ளார்.