கோலாலம்பூர், ஜூன்.09-
முன்னாள் உதவியாளர் யூசோப் ராவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரொஸாயினைச் சாடி வரும் தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸையிட் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
சமூக வலைத்தளங்களில் சாடி வரும் தரப்பினரைச், சட்டத்துறைத் தலைவர் டுசுகி மொக்தார் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. மாறாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் நீதி நிலை நாட்டப்படுவதற்குக் கடைமையாற்றி வரும் நீதிபதிகளை நிந்திக்கும் தன்மையில் யாரும் ஈடுபடக் கூடாது என்று ஸையிட் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.