கோலாலம்பூர், ஜூன்.10-
இயற்கைக்கு மாறாக இருதயத்தில் பாதி வடிவமே கொண்டு, உயிருக்குப் போராடி வந்த சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவியான ஹர்ஷித்தா சாய் உயிரிழந்தார்.
ஆசிரியர்கள் R. செல்வகணபதி – உஷா தம்பதியரின் ஒரே மகளான ஹர்ஷித்தா சாய், பிறந்தது முதல் இருதயத்தில் ஏற்பட்ட கோளாறினால் அவதியுற்ற நிலையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிதி உதவி உட்பட பொதுமக்கள் அளித்த நிதியின் மூலம் அந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் உள்ள போஸ்டன் சிறார் நிபுணத்துவ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பெற்றார்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறுவார் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது ஒரே மகளை, எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கில் சிகிச்சைக்குத் தேவைப்படக்கூடிய 15 லட்சம் ரிங்கிட்டைப் பொது மக்களிடம் நிதி உதவியாகக் கோரினார் தந்தை செல்வகணபதி.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்த போதிலும், பத்து கேவ்ஸைச் சேர்ந்த அந்த ஒன்பது வயது சிறுமி உயிரைக் காப்பாற்ற இயலவில்லை. அவர் நம்மை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளார் என்று பிரதமர் அன்வார் சார்பில் நிதி உதவி வழங்கிய அவரின் அரசியல் செயலாளர் டத்தோ அஹ்மாட் ஃபர்ஹான் ஃபௌஸி தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.