கோலாலம்பூர், ஜூன்.10-
தனக்கு எதிரான சிவில் வழக்கிலிருந்து விடுபடுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சட்டப் பாதுகாப்பைக் கோருவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது குற்றஞ்சாட்டியுள்ளார்.
அன்வாரின் குற்றமற்றத் தன்மை குறித்து தொடர்ந்து சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ள துன் மகாதீர், ஒரு நபர், இழைத்துள்ள காரியம், சரியா, தவறா? என்பதை நீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றார்.
ஒரு சமயத்தில் சட்டப் பாதுகாப்பு, நமக்கு அரணாக இருந்தாலும் மற்றொரு சமயத்தில் அது கிடைக்காது என்றார்.
மற்றவர்கள், நீதிமன்றத்தில் தண்டிப்பதற்கு முன்பே அவர்கள் பல மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால், ஒருவர் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்படுவதற்கு முன்பே அவர் தண்டிக்கப்பட்டு விடுகிறார்.
ஆனால், அது மற்றவர்களுக்கு பொருந்தாமல், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கதவு திறக்கப்படுகிறது என்று அன்வார் தொடர்புடைய வழக்கை துன் மகாதீர் முறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்.