பிரேக் செயலிழந்து விட்டதாக ஓட்டுநர் கூறுகிறார்

ஈப்போ, ஜூன்.10-

தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரி கோர விபத்திற்கு, அவர்கள் பயணித்த பேருந்து, பிரேக் செயல்படாமல் போனதே காரணமாகும் என்று அந்த பேருந்தைச் செலுத்திய ஓட்டுநர் கூறுகிறார்.

கடுமையான காயங்களுடன் தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 39 வயது அமிருல் ஃபாடில் ஸுல்கிப்ளி கூறுகையில் ஜெலி-கெரிக் கிழக்கு மேற்கு சாலையில் கெரிக் யானைகள் கடக்கும் பாலத்தைக் கடக்கும் போது, பிரேக் முற்றாகச் செயலிழந்து விட்டதை அப்போதுதான் உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

கோலத் திரங்கானுவில் இருந்து புறப்படும் போது, நன்றாகச் செயல்பட்ட பேருந்து பிரேக், அந்த பாலத்தைக் கடந்ததும் பிரேக் செயல் இழந்து விட்டது. அந்த வளைவுப் பாதையில் பேருந்தின் வேகத்தைக் குறைப்பதற்குத் தாம் பிரேக்கை அழுத்திய போதுதான், அது முழுமையாகச் செயல்படாமல் போனதை அறிந்ததாகவும், அதன் பின்னர் பேருந்து தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபத்தையும் மன்னிப்பையும் கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த பேருந்து ஓட்டுநர், மருத்துவமனையிலிருந்து வெளியேறியதும், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS