சவுதி அரேபியா, ஜூன்.10-
கோல் மன்னன் கிரிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல்-நாசர் கிளப்பில் தொடர்ந்து விளையாடவிருப்பதை உறுதிச் செய்துள்ளார். அக்கிளப்பில் இருந்து வெளியேறி அவர் வேறோர் அணியில் இணையவிருப்பதாக இதற்கு முன் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ரொனால்டோவின் இந்த அண்மைய கூற்று அமைந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் இருந்து வெளியேறிய ரொனால்டோ பின்னர் அல்-நாசர் கிளப்பில் சேர்ந்தார். அக்கிளப்புடனான அவரது ஒப்பந்தம் இம்மாதம் 30 ஆம் தேதி வரை உள்ளது. இந்நிலையில் அவர் அக்கிளப்பிலேயே நீடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.
ரொனால்டோ, நேற்று யுஏஃபா நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை போர்ச்சுகல் வெல்ல உதவினார். அவர் அவ்வாட்டத்தில் கோலடித்தார். அந்த கோல் அனைத்துலக அரங்கில் அவர் புகுத்திய 138 ஆவது கோலாகும்.