கோலாலம்பூர், ஜூன்.10-
பொது மக்களின் அடையாளக் கார்டான மைகாட் அட்டையைக் கேட்டு வாங்குவதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ பாதுகாவலர்களுக்கு அதிகாரமில்லை என்று தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு தேசிய பதிவு இலாகா சட்டத்தின் கீழ் 5 தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பொதுமக்களின் அடையாளக் கார்ட்டை வாங்கிப் பார்ப்பதற்கும், சோதிப்பதற்கும் அதிகாரம் உள்ளது என்று ஜேபிஎன் குறிப்பிட்டுள்ளது.
ஜேபிஎன் அதிகாரிகள், போலீசார், சுங்கத் துறையினர், கடமையில் உள்ள இராணுவத்தினர் மற்றும் தேசிய பதிவு இலாகா தலைமை இயக்குநரால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டுமே ஒருவரின் அடையாளக் கார்ட்டை வாங்கிப் பார்ப்பதற்கு அதிகாரம் உள்ளது என ஜேபிஎன் தெளிவுபடுத்தியுள்ளது.
அடையாளக் கார்ட்டை கேட்டு வாங்கிப் பார்ப்பது, வைத்திருப்பது மற்றும் அதனை உள்ளீடு செய்வது முதலிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாதுகாவலருக்கு அதிகாரமில்லை. அவ்வாறு செய்வது சட்டத்தை மீறியச் செயலாகும். அதற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஜேபிஎன் விளக்கம் அளித்துள்ளது.