தனியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவதிகாரி மீது நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூன்.11-

தனியார் உயர்க்கல்விக் கூடத்திற்குச் சொந்தமான 8 லட்சத்து 26 ஆயிரத்து 481 ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்ததாக அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவதிகாரி ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள அந்த தனியார் பல்கலைக்கழத்திற்குச் சொந்தமான பணத்தைப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, கட்டம் கட்டமாக மீட்டு இருப்பதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

40 வயது முகமட் ஃபைருஸ் அல்-ஃபாத்தா படாருடின் என்ற முன்னாள் பதிவதிகாரி நீதிபதி சுஸானா ஹுசேன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுன் 20 ஆம் தேதிக்கும், ஜுலை 10 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் கோலாலம்பூர், ஜாலான் ராஜா சூலானில் உள்ள ஒரு வங்கியில் அந்த முன்னாள் பதிவதிகாரி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 468 பிரிவின் கீழ் அந்த பதிவதிகாரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS