கோலாலம்பூர், ஜூன்.11-
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதன்படி, எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி, வரும் ஜுலை முதலாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் அரிசி, சீனி, கோதுமை மற்றும் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு விலக்களிப்பு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
விரிவுப்படுத்துப்பட்டுள்ள எஸ்எஸ்டி தொடர்பான விவரங்கள் குறித்து நிதி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 5 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் அவை 5 விழுக்காடு விற்பனை வரிக்கு உட்பட்டவையாகும். எனினும் உள்ளூரில் விளையும் பழங்களுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றன.
தவிர அரிசி, கோதுமை, சீனி, உப்பு மற்றும் இறைச்சி போன்ற இறக்குமதி செய்யப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள் மற்றும் அத்தியாவசியமானவை என்று கருதப்படும் பொருட்களுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றன.
இதே போன்று உள்ளூரில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்க்கு வரியிலிருந்து விலக்களிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.