கோலாலம்பூர், ஜூன்.11-
தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள், பேருந்து விபத்தில் மரணமுற்றதைத் தவறாக வியாக்கியானப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்தைப் பதிவேற்றம் செய்த ஆசிரியர் ஒருவர், தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட 15 குடும்பத்தினரின் மனதை நோகடிக்கும் தன்மையில் அந்த ஆசிரியர் தனது கருத்தைப் பதிவேற்றம் செய்தற்கு பலர் கண்டனம் தெவித்தனர்.
அவர்களின் மரணம் இழிவானது என்றும் அவர்கள் பிடிபிடிஎன்னில் வாங்கிய கல்விக் கடனைத் திருப்பி செலுத்தாதவர்கள் என்றும் காலிட் யூனுஸ் என்ற ஆசிரியர் தனது முகநூலில் விமர்சித்து இருந்தார்.
எனினும் அப்படியொரு கருத்தை வெளியிட்டதற்காகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.