கோலாலம்பூர், ஜூன்.11-
தனது காருக்குள் கனபீஸ் போதைப் பொருளையும், இரண்டு செயற்கைக் கைத்துப்பாக்கிகளையும் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஆய்வாளரான முகமட் யூசோப் ரவுத்தருக்கு எதிரான வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நாளை வியாழக்கிழமை தீர்ப்பளிக்கவிருக்கிறது.
32 வயது யூசோப் ரவுத்தர் விடுதலை செய்யப்படுவாரா? அல்லது எதிர்வாதம் புரியும்படி உத்தரவிடப்படுவாரா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் நாளை தனது முடிவை அறிவிக்கவிருக்கிறது.
யூசோப் ரவுத்தருக்கு எதிராக பிராசிகியூஷன் தரப்பினர் கொண்டு வந்துள்ள குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் உண்டா? இல்லையா? என்பது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் ஜாமில் ஹுசேன் காலையில் தனது முடிவை அறிவிக்கவிருக்கிறார்.
இவ்வழக்கில் முடிவு, யூசோப் ரவுத்தருக்குச் சாதகமாக அமையுமானால் அவர் எதிர்வாதம் செய்யப்படாமலேயே வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதை பிராசிகியூஷன் தரப்பு நிரூபித்துள்ளது என்று நீதிபதி அறிவிப்பாரேயானால், யூசோப் ரவுத்தர் சாட்சிக் கூண்டில் அமர்ந்து, எதிர்வாதம் புரிய உத்தரவிடப்படுவார்.
கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கிய இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பில் 13 பேர் சாட்சியம் அளித்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 10.15 மணியளவில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் முன்புறம் உள்ள ஒரு சூராவ் அருகில் காரில் சென்று கொண்டு இருந்த யூசோப் ரவுத்தரைப் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அவர் காரில் 305 கிராம் கனபீஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் யூசோப் ரவுத்தர் இரண்டு செயற்கைக் கைத்துப்பாக்கிகளைத் தன் வசம் வைத்திருந்ததாக அவருக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.