இரண்டு அடுக்கு பேருந்து, வாகன இழுவை லோரியில் மோதியது

தாப்பா, ஜூன்.12-

இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று, வாகன இழுவை லோரியுடன் மோதியதில் பேருந்து ஓட்டுநர் கடும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 1.20 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 311.4 ஆவது கிலோ மீட்டரில் பேரா, தாப்பா அருகில் நிகழ்ந்தது.

லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, அவதியுற்ற அந்த பேருந்து ஓட்டுநரை மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியை நாடினர்.

அந்த பேருந்து, உதவி ஓட்டுநர் உட்பட 11 பேருடன் சென்று கொண்டு இருந்த போது, வாகன இழுவை லோரியின் பின்புறம் மோதியதாகத் தெரிய வந்துள்ளது. இதில் லோரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காயமடையவில்லை என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS