கோலாலம்பூர், ஜூன்.12-
மலேசியாவிற்கு இரண்டு முறை தாம் பிரதமராக பொறுப்பேற்ற நிலையில், தற்போது பிரதமர் பதவி எதுவும் இல்லாவிட்டாலும் மக்கள் மத்தியில் தாம் இன்னமும் பிரபலமாக விளங்குவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்தார்.
தம்மிடம் தற்போது அதிகாரம் எதுவும் இல்லை. ஆனால், மக்கள் மனங்களில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
ரஷியாவின் சுதந்திரத் தினத்தையொட்டி கோலாலம்பூரில் நேற்று இரவு ரஷிய தூதரகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துன் மகாதீர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
துன் மகாதீரின் வருகையையொட்டி ரஷிய தூதகரம், சிறப்பான வரவேற்பை நல்கியது. நிகழ்ச்சி முடியும் வரையி்ல் பலர், துன் மகாதீருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினர்.
இது எதைக் குறிக்கிறது என்று செய்தியாளர்கள் துன் மகாதீரிடம் வினவிய போது, பிரதமர் பதவியில்லை. ஆனால், மக்கள் மனதில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளேன் என்றார்.
பலர், துன் மகாதீருக்கு 100 ஆவது பிறந்த தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.