தெமர்லோ, ஜூன்.12-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை மோதியதில் இரு இளம் பெண்கள் மரணமுற்றனர். இச்சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் பகாங், தெமர்லோ, ஜாலான் தெங்கு இஸ்மாயில் சாலையில் நிகழ்ந்தது.
அந்த இரு பெண்களும் சமிக்ஞை விளக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
இதில் 18 வயது இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். சிவப்பு நிற சமிக்ஞை விளக்கைக் கண்டதும், அந்த இரு பெண்களும் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திய வேளையில், அவர்களை முந்திச் செல்ல முனைந்த பெரோடுவா பெஸா கார், அந்தப் பெண்களின் மோட்டார் சைக்கிளை மோதியதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மஸ்லான் ஹாசான் தெரிவித்தார்.
அந்த காரைச் செலுத்திய 38 வயதுடைய நபரின் அவசரப் போக்கினால் இவ்விபத்து நிகழ்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த இரு பெண்கள் தாமான் தெமர்லோ ஜெயாவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டது.