கோலாலம்பூர், ஜூன்.12-
கோலாலம்பூர் மையப் பகுதியான புடுவில் உள்ள இரவு கேளிக்கை இன்னிசை விடுதிகளில் குடிநுழைவுத் துறையினர் இன்று விடியற்காலை வரை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் பயண ஆவணமின்றிய 188 அந்நியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு தொடங்கி, இன்று அதிகாலை 2 மணி வரை நடத்தப்பட்ட இந்த மாபெரும் சோதனை நடவடிக்கையில் கேளிக்கை மையங்களில் இருந்த 310 பேரிடம் சோதனை செய்யப்பட்டது. இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 188 அந்நியர்கள் பிடிபட்டதாகக் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.
பிடிபட்டவர்களில் 185 இந்தோனேசியர்கள் ஆவர். மொத்தம் 106 ஆண்கள், 79 பெண்கள் கைது செய்யப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.
21 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள், தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று குடிநுழைவுத்துறை மேலும் கூறியது.