முகமட் யூசோப் ரவுத்தர் விடுதலை: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோலாலம்பூர், ஜூன்.12-

தனது காருக்குள் கனபிஸ் போதைப் பொருளையும், இரண்டு செயற்கை கைத்துப்பாக்கிகளையும் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஆய்வாளரான முகமட் யூசோப் ரவுத்தரை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

32 வயது யூசோப் ரவுத்தருக்கு எதிராக பிராசிகியூஷன் தரப்பினர் கொண்டு வந்துள்ள அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுதலை செய்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் ஜாமில் ஹுசேன் தீர்ப்பு அளித்தார்.

அந்த முன்னாள் ஆய்வாளர், தன் காரில் போதைப்பொருள் வைத்திருந்தார், இரண்டு துப்பாக்கிகளைத் தன் வசம் வைத்திருந்தார் என்பதை அடிப்படை முகாந்திரங்களுடன் நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு தோல்விக் கண்டதாக முகமட் ஜாமில் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 10.15 மணியளவில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் முன்புறம் உள்ள ஒரு சூராவ் அருகில் காரில் சென்று கொண்டு இருந்த யூசோப் ரவுத்தரைப் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அவர் காரில் 305 கிராம் கனபிஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் யூசோப் ரவுத்தர் இரண்டு செயற்கைக் கைத்துப்பாக்கிகளைத் தன் வசம் வைத்திருந்ததாக அவருக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

யூசோப் ரவுத்தருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் எந்த அளவிற்கு அடிப்படை முகாந்திரங்கள் உள்ளன என்பதைக் கண்டறிவதற்கு இவ்வழக்கின் பூர்வாங்கத் தன்மையை முழுமையாக ஆராய்ந்ததில், ஆதாரங்களை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு தோல்விக் கண்டுள்ளதாக நீதிபதி முகமட் ஜாமில் ஹுசேன் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கிய இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பில் 13 பேர் சாட்சியம் அளித்தனர்.

WATCH OUR LATEST NEWS