குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் லான்ஸ் கோப்ரல்

ஷா ஆலாம், ஜூன்.12-

தனது காதலியான தஞ்சோங் மாலிங் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் கொலை செய்ததாக ஒரு போலீஸ்காரரான லான்ஸ் கோப்ரல் ஒருவர், இன்று ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

27 வயது லான்ஸ் கோப்ரல் முகமட் அலிஃப் மொன்ஜானி என்ற அந்த போலீஸ்காரர் கடந்த ஆண்டு ஜுலை 15 ஆம் தேதி மாலை 6 மணியளவில் உலு சிலாங்கூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உலு பெர்னாம், எஸ்கேசி கிளேடாங் செம்பனைத் தோட்டத்தில் 25 வயது பல்கலைக்கழக மாணவி நூர் ஃபாரா கார்த்தினி என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40ஆ ண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டமான 302 பிரிவின் கீழ் அந்த போலீஸ்காரர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

சிலிம் ரீவர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவரான அந்த போலீஸ்காரர், நீதிபதி ஜூலியா இப்ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

எனினும் அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். கொலை வழக்கு என்பதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS