இந்தியாவிற்கான ஓன்லைன் விசாவைப் பெறுவதில் நெருக்கடி: பலர் பரிதவிப்பு

கோலாலம்பூர், ஜூன்.12-

இந்தியாவிற்குச் செல்வதற்கு இந்தியத் தூதரகத்தில் ஓன்லைன் விசாவைப் பெறுவதில் மலேசியர்கள், கடந்த ஒரு வார காலமாக பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓன்லைன் விசாவிற்கு நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம் குறைந்த பட்சம் 72 மணி நேரமாகும். அந்த 72 மணி நேரத்தில் மனுதாரின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படலாம். அல்லது நிராகரிக்கப்படலாம்.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஓன்லைன் விசாவைப் பெறுவதில் பலர் 72 மணி நேர கால அவகாசத்தையும் தாண்டிய நிலையில், பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளதாக பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், இந்தியாவிற்குச் செல்வதற்கு விமான டிக்கெட்டை முன் உறுதி செய்தவர்கள், தங்கள் பயணத்தை ஒத்திவைக்க வேண்டிய அல்லது ரத்து செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இன்னும் சிலர் அவசரத் தேவைக்கு இந்தியாவிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், இந்திய தூதரத்திற்கே நேரடியாகச் சென்று ஆபத்து, அவசரத்திற்குரிய விசாவை 650 ரிங்கிட் கட்டணத்தில் பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஓன்லைன் விசா தொடர்புமுறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறே இந்த தாமதத்திற்கு காரணம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாக பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் ஒரு வாரம் கடந்தும் இந்த கோளாறு இன்னும் சரி செய்யப்படாமல் இருப்பது தங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாக பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடைய இந்தியாவிற்குச் செல்ல விரும்பும் பயணிகள், தங்கள் பயணத்திற்கு முன்னதாக ஓன் லைன் விசா தொடர்பில் தங்களுக்கு நன்கு அறிமுகமான பயண நிறுவனங்களின் ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS