கோலாலம்பூர், ஜூன்.12-
போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாக தமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றவியல் வழக்கில் இன்று, தாம் விடுதலை செய்யப்பட்ட போதிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராகத் தாம் தொடுத்துள்ள சிவில் வழக்கில் நீதி நிலை நாட்டப்படுவதற்குத் தொடர்ந்து போராடப் போவதாக முகமட் யூசோப் ரவுத்தர் இன்று உறுதி பூண்டுள்ளார்.
நாட்டின் நீதிபரிபாலனத்தின் மூலம் தமது போராட்டம் தொடரும் என்று கோலாலம்பூர், ஜாலான் டூத்தா நீதிமன்ற கட்டடத்தில் தனது வழக்கறிஞர்கள் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் யூசோப் ரவுத்தர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சிவில் வழக்கைத் தாம் தொடுத்துள்ள காரணத்தினால் தமக்கு பல வழிகளில் அநீதி இழைக்கப்பட்டு, தமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக யூசோப் ரவுத்தர் குறிப்பிட்டார்.
எனினும் நீதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட யூசோப் ரவுத்தர், தமக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் மலேசிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.