மித்ரா நிதியைப் பெற்றுத் தருவதில் பிரதமர் தலையிட வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.12-

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 40 மில்லியன் ரிங்கிட் நிதியை விரைவாக வழங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று மேலவை உறுப்பினர் டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

2025 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் முதல் கட்டமாக இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தும் 45 திட்டங்கள் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டங்களானது கல்வி, திறன் பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் பெண்கள் தொழில் மேன்மை உள்ளிட்ட பல்வேறு உயர் தாக்க முயற்சிகளை உள்ளடக்கியுள்ளன.

இவை ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் விண்ணப்பங்கள் அல்ல, மாறாக, இந்த 45 திட்டங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, முறையான அரசு சாரா நிறுவனங்கள், பயிற்சி மேற்பார்பார்வையாளர்கள் சமூக மேம்பாட்டு சகாக்கள் ஆகியோருடன் கூட்டாக இணைந்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தின் வாயிலாக கையெழுத்திடப்பட்டவையாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

ஆனால் இன்று வரை, ஒரு சல்லிக் காசு கூட வழங்கப்படவில்லை, என்று டாக்டர் லிங்கேஸ்வரன் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த தாமதமானது விண்ணப்பதாரர்களிடையே குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது மட்டுமல்லாமல், திட்டமிடப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதையும் பாதித்துள்ளது என்றும், மித்ரா மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்றும் டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

2025 ஆம் ஆண்டுக்கான சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி திறக்கப்பட்டு இவ்வாண்டு ஜனவரி 5 ஆம் தேதி மூடப்பட்டதையும் அவர் விளக்கினார்.

அந்தக் காலக் கட்டத்தில், பல்வேறு நிறுவனங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்து தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்தன, பின்னர் அவை விரிவான மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு இறுதியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றன.

இந்த விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு விண்ணப்பமும் நிபந்தனையும் பூர்த்தி செய்துள்ளது ஆனால், அது தொடர்பான எந்தவொரு விளக்கமும் சமூகத்திற்கு அளிக்கப்படவில்லை என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS