ஆமதாபாத், ஜூன்.12-
இந்தியா, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 242 பேரும் பலியானதாக அஞ்சப்படுகிறது.
ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம், இன்று மதியம் 1.40 மணியளவில் லண்டனில் உள்ள கேட்வீக் நகரை நோக்கிப் புறப்பட்ட நிலையில் சில நொடிகளில் விபத்திற்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலிருந்து கரும் புகைகள் கிளம்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்து அருகில் உள்ள மெகானியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் 230 பயணிகள், இரண்டு விமானிகள், பத்து ஊழியர்கள் என மொத்தமாக 242 பேர் பயணித்துள்ளனர். நீண்ட தூர பயணத்திற்காக விமானத்தில் அதிகளவில் எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது.
இந்த விபத்தில் யாரும் பிழைக்கவில்லை. 242 பேரும் பலியானதாக அஞ்சப்படுகிறது. விமானத்தில் 7 குழந்தைகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. விமானம் ஓடு பாதையிலிருந்து மேலே எழும்புவதற்கு சிரமப்பட்டதாகவும், சிறிது தூரம் எழும்பிய பின்னர் தொடர்ந்து எழும்ப முடியாமல் வளைந்து கீழே இறங்கத் தொடங்கியது. சிறிது நேரத்தில் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியதாக கேமரா பதிவுகளில் தெரிய வந்துள்ளன.
விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் மீட்புப் பணிகள் துரித வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. குஜராத்தில் நிகழ்ந்த மிக மோசமான விமான விபத்தையடுத்து அங்கு விமானச் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆமதாபாத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சென்னை உட்பட பிற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.