ஹோர்ன் சத்தத்தை எழுப்பினார் என்பதற்காக லோரி ஓட்டுநரை, ஆடவர் ஒருவர் மடக்கித் தாக்கும் காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர்பாரு, கெம்பாஸ் டோல் சாவடியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.35 மணியளவில் 31 வயது நபரிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.
பிற்பகல் 2.30 மணியளவில் கெம்பாஸ் டோல் சாவடியில், டோல் கட்டணத்தைச் செலுத்துவதற்காகத் தாம் நின்று கொண்டு இருந்த போது, இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது லோரிக்கு முன் நின்று கொண்டு இருந்த புரோட்டோன் வீரா கார், டோல் சாவடி திறந்த பின்னரும் நகராமல் நின்று கொண்டு இருந்ததைத் கண்டு, நினைவுறுத்தும் வகையில் தாம் ஹோர்ன் சத்தத்தை எழுப்பியதாக அந்த லோரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தக் காரில் இருந்தவர், கதவைத் திறந்து வெளியே வந்து, தனது லோரியின் கதவைத் திறக்கச் சொன்னதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த நபரால் தாம் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் அந்த லோரி ஓட்டுநர் புகார் அளித்துள்ளார் என்று பல்வீர் சிங் குறிப்பிட்டார்.