ஈப்போ, ஜூன்.13-
கடந்த திங்கட்கிழமை கிழக்கு மேற்கு சாலையில் கெரிக் பகுதியில் உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் உயிரிழந்த சம்பவ இடத்தில், அன்று அதிகாலையில் தீயணைப்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது, அந்த இடத்தில் ஒரு வித்தியாசமான நறுமணம் சூழ்ந்து இருந்ததாக ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அடந்த காடுகள் நிறைந்த அந்தச் சாலையில் மீட்புப் பணியின் போது, அவ்வழியே கடந்த தாமும் அவ்விடத்தில் இருந்ததாகவும், சடலங்களை அகற்றும் பணியின் போது ஒரு வித்தியாசமான அந்த நறுமணம் அப்பகுதியில் சூழ்ந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக கெரிக் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத் தலைவர் முகமட் அஸிஸான் அஸிஸிடம் கருத்து கேட்ட போது, அத்தகைய வாசனை அங்கு சூழ்ந்திருந்ததைத் தம்மால் உறுதிப்படுத்த இயலவில்லை என்றார்.
அப்படியே அத்தகைய நறுமணம் வீசியிருந்தாலும் அது விபத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வைத்திருந்த வாசனைத் திரவியத்தால் அத்தகைய நறுமணம் வீசியிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.